ரயில் முன்பதிவு 1000 சதவிகிதம் உயர்வு... கறுப்பு பணத்தை மாற்றும் முயற்சியா?

கறுப்பு
500,1000 ரூபாய்  நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்த நாளில் இருந்து, ஆயிரக் கணக்கில் வைத்து  இருப்பவர்கள்  கூட இதை  எப்படி மாற்றுவது என வழி  தெரியாமல் விழி  பிதுங்கி  நிற்கின்றனர்.

எந்தக் கடையில்  சாப்பிடலாம் என்பதற்கே கூகிள்  பண்ணி  பார்ப்பவர்கள் இதற்கு  சும்மா  இருப்பார்களா என்ன.  கடந்த  இரண்டு  நாட்களில் மட்டும்  கறுப்பு பணத்தைப்  பதுக்குவது எப்படி என்கிற தேடல் கூகிளில் ட்ரெண்ட்  ஆகியுள்ளது. அதே  போன்று கருப்புப்  பணத்தை மாற்ற ரயில் விமான டிக்கெட்டுகளை மொத்தமாக புக்  செய்து கேன்சல் செய்வதும் அதிகரித்துள்ளது.

 கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர  மோடி 500,1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது  என்று  அறிவித்தார். அவர் அறிவித்த  சில மணி  நேரங்களில் இருந்து  கறுப்பு  பணத்தை வெள்ளையாக்குவது  எப்படி என்று கூகிளின்  உதவியை பலர் நாடியுள்ளனர். அதில் மோடியின்  சொந்த  மாநிலமான குஜராத் இதில், முதல் இடத்தில உள்ளது .

முதலீட்டாளர்கள், சிறு வணிகர்கள்,  நகை  வியாபாரிகள், அதிகம்  உள்ள இந்த  மாநிலத்தில்  கறுப்பு  பணத்தை எப்படி  மாற்றலாம்  என இணையத்தில் அதிகம் பேர்  தேடியுள்ளனர். இதற்கு அடுத்த  இடத்தில்  இந்தியாவின் வணிக  மையம் என்று அழைக்கப்படும் மும்பை  நகரம்  உள்ளது. இதன்  காரணமாக மும்பை பங்கு  வர்த்தகம்  கடும்  சரிவையம் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஹரியானா மாநிலம் அடுத்த  இடத்தில் உள்ளது. 1500 கோடி ரூபாய் நில  மோசடி புகாரில் அம்மாநில முன்னாள் முதல்வர் வீட்டில் சி பி ஐ  விசாரணை  நடத்தியது. இதற்கு  அடுத்த  இடத்தில இந்தியாவில்  உள்ள  மற்ற  மாநிலங்கள்  உள்ளன.

இந்தியாவில் உள்ள 277 மில்லியன் இணைய பயனாளர்களின் அதிகமானோர் கூகுளில்   தேடிய  முதல்  ஐந்து கேள்விகள்  கறுப்பு  பணம்  தொடர்பாக இருந்துள்ளது. இதே போன்று 500,1000 ரூபாய் நோட்டுகள் எங்கு எல்லாம் செல்லும் என்று அரசு அறிவித்த இடங்களில் எல்லாம் வரலாறு காணாத பண  பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.
கருப்பு பணம்

ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு 1000 சதவிகிதம் அதிகரித்துள்ளது.ரயிலில் முதல் வகுப்பு ஏ .சி  டிக்கெட்டுகள் முன்பதிவு  முன்  எப்போதும் இல்லாத  அளவிற்கு அதிகரித்துள்ளது.இதன் மூலம் ரயிலில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.இந்த முறையற்ற முன்பதிவு  குறித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் ரயில்வே  நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து கேன்சல் செய்வதன் மூலம்  கறுப்பு பணம் மாற்றப்படுகிறதா என லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையங்களில்  உள்ள  முதல் வகுப்பு  பயணிகள் அறையில் 500,1000 ரூபாய்களை  வைத்து முன்பதிவு செய்த பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்களா என்றும்  கண்காணிக்கப்பட உள்ளது.

அதே வேளையில்  முன்பதிவுகளை  கேன்சல் செய்யும் போது 10ஆயிரம் வரை மட்டுமே பணமாக கொடுக்கப்படும் அதற்கு மேல் வங்கி கணக்கு மூலமே திருப்பி  தரப்படும். 50ஆயிரத்துக்கு  மேல்  என்றால் பான் கார்டு காட்டினால் மட்டுமே கொடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதே போன்று விமான  நிலையங்களிலும் 500,1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்வது திடீரென  அதிகரித்துள்ளது.விமான டிக்கெட்டுகளை புக் செய்வதன் மூலம்  கறுப்பு பணத்தை உடனடியாக மாற்றலாம் என்பதால் இந்த வழியை பயன்படுத்துவதாகக்  கூறப்படுகிறது.

இதனையடுத்து 500,1000,ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்தவர்களின் விமான டிக்கெட்டுகளை  கேன்சல் செய்ய  முடியாது என  விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன

Comments