பெங்களூருவில் வங்கி பணத்துடன் கடத்தப்பட்ட வேன் சிக்கியது : குடும்பத்துடன் டிரைவர் மாயம்


பெங்களூரு: பெங்களூருவில் ஏ.டி.எம்.,மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1.37 கோடி பணத்துடன் வேன் கடத்தி செல்லப்பட்டது. தற்போது இந்த வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேனை ஓட்டி சென்ற டிரைவர் குடும்பத்துடன் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
கடத்தல்:


கர்நாடக தலைநகர் பெங்களூரு அவின்யூவில் கே.ஜி., சாலையில் பாங்க் ஆப் இந்தியா உள்ளது. இந்த வங்கியிலிருந்து ஏ.டி.எம்.,மிற்கு பணம் நிரப்ப வேனில் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த வேனில் மொத்தம் ரூ.1.37 கோடி பணம் இருந்தது. வாகனத்தில் டிரைவர் மற்றும் போலீசார் உடன் வந்தனர். வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம். சென்றதும், போலீசார் மற்றும் அதிகாரிகள் இறங்கி ஏ.டி.எம்., மையத்தை சோதனை செய்ய சென்றனர். அவர்கள் சென்றதும், டிரைவர் வேனை அங்கிருந்து பணத்துடன் கடத்தி சென்றார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, வேன் நகரை வெளியேற முடியாத நகையில் பெங்களூரு சீல் வைக்கப்பட்டது. கடத்தி செல்லப்பட்ட வேனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
வேன் கண்டுபிடிப்பு :


இந்நிலையில், பணத்துடன் கடத்தப்பட்ட வேன், மவுண்ட்கார்மல் கல்லூரி அருகே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வேனில் இருந்த ரூ.1.37 கோடியில் ரூ.92 லட்சத்தை எடுத்துக் கொண்டு, ரூ.45 லட்சத்துடன் வேனை, வேன் டிரைவர் விட்டுச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், வேனை கடத்திச் சென்ற டிரைவரின் பெயர் டோம்லிக் ராய் என்பதும், இவர் லிங்கராஜபுரத்தில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. துபாயில் வேலை பார்த்து வந்த இவர் 4 மாதங்களுக்கு முன்பு தான் இந்தியா வந்துள்ளார். டோம்லிக் ராய் நேற்று காலை முதல் தனது மொபைல் போனை ஸ்விட் ஆப் செய்து வைத்திருப்பதும், வேன் கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே டோம்லிக் ராய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மாயமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Comments