தொழிலதிபர்கள் வீட்டில் சிக்கிய பல கோடி ரூபாய்... விஷாலின் புது ஐடியா..!


தொழிலதிபர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த பணத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கழிவறை கட்ட பயன்படுத்தலாம் என நடிகர் விஷால் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தொழிலதிபர்களான சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பி‌ரேம் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 3 இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் 107 கோடி ரூபாய் பணமும், 127 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் சென்னை தொழிலதிபர்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறைகள் கட்ட பயன்படுத்தலாம் எனவும், தொழுநோய் மற்றும் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு நன்கொடை வழங்கலாம் எனவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் மக்களின் உணவிற்காக இந்த பணத்தை வழங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ள விஷால், அனைத்து விவசாயிகள் மற்றும் கல்விக் கடன்களை இதன் மூலம் தள்ளுபடி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments